திருமுருகன்காந்திக்கு சிறையில் திடீர் மயக்கம்.. வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை
வேலூர்: வேலூர் சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருமுருகன்காந்திக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை வயிற்று போக்கு, மயக்கம், மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவரை இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர்.
கடந்த 45 நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கபட்ட திருமுருகன் காந்தியை வாரத்துக்கு 3 நாட்கள் சென்னை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்கின்றனர். மேலும் சீர்காழி தூத்துக்குடி நீதிமன்றத்துக்கும் அழைத்து செல்லப்படுகிறார்.
தொடர்ந்து அவரை அலைக்கழித்து வருவதால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனது உடல்நலமின்மை தொடர்பாக திருமுருகன் காந்தி, தன்னை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரியுள்ளார். எனினும் நீதிமன்றம் உத்தரவிட்டும் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications