சந்திர கிரகணம்- திருநள்ளாறில் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம்
திருநள்ளாரு: சந்திர கிரகணத்தையொட்டி தமிழகம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சனிக்கிழமை பல மணிநேரம் நடை மூடப்பட்ட நிலையில், திருநள்ளாறு கோயிலில் வழக்கம்போல் தரிசனம் நடைபெற்றது. வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் ஏமாற்றமின்றி தரிசனம் செய்துச்சென்றனர்.
சந்திர கிரகணம் சனி்க்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 3.45 மணிக்குத் தொடங்கி 7.15 மணி வரை நீடிக்குமென வாக்கியப் பஞ்சாங்கம் தெரிவிக்கிறது. தமிழகத்தின் முக்கிய பல கோயில்களில் 11 மணி நேரம் நடை சாத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. திருப்பதி திருமலை தேவஸ்தானத்திலும் இதுபோன்று நடை சாத்தப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டது.

திருநள்ளாறு நவகிரகங்களில் ஒன்றான சனீஸ்வரன் அருள்பாலிக்கும் ஸ்தலம். இக்கோயிலில் சனிக்கிழமை சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், அதிகாலை முதல் இரவு வரை வழக்கம்போல் நடை திறந்திருக்குமென கோயில் நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. அதன்படி அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்ட நடை, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
இதுகுறித்து இக்கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் கூறும்போது, சூரிய, சந்திர கிரகணம் ஏற்படும்போது, பல கோயில்களில் நடை சாத்தப்படுவது வழக்கமாக இருந்தாலும், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இவ்வழக்கம் கிடையாது.
இக்கோயிலில் ஸ்தல விருட்சம் தர்ப்பையாகும். தர்ப்பை வனத்தில் கோயில் கட்டப்பட்டது கிரகணத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வல்லது தர்ப்பை. இந்த கருத்தின் அடிப்படையில், கிரகண காலகட்டத்தில், நடை சாத்தப்படுவது இல்லை. சனிக்கிழமை கிரகணம் ஏற்பட்டாலும், இக்கோயிலில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்தனர். அனைவரும் ஏமாற்றமில்லாமல் தரிசனம் செய்துச் சென்றனர். சனிக்கிழமையில் நடக்கும் வழக்கமான பூஜைகள் கோயிலில் நடத்தப்பட்டது என்றும் கோவில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications