அம்மா சாவுக்கு வராத நீங்க எங்களுக்கு தேவையில்லை.. திருப்பூர் எம்.எல்.ஏவுக்கு எதிராக பொங்கிய மக்கள்
திருப்பூர்: வளர்ப்புத் தாயின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்காமல் கூவத்தூரில் கொட்டமடித்து அவப் பெயரைத் தேடிக் கொண்ட திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமாரை தொகுதிக்குள நுழையவிடாமல் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பதற்றம் நிலவியது.
தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் போது தங்கள் கருத்துகளை கேட்காமல் சசிகலா தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்ததால் பொதுமக்கள் எம்எல்ஏ-க்கள் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக பொதுமக்கள் தண்ணீரின்றி அவதியடைந்தபோது தொகுதிக்குச் செல்லாமல் கூவத்தூரிலேயே இருந்தனர்.

தமிழகத்தில் எம்எல்ஏ-க்களின் விருப்பம் போல் ஆட்சி அமைந்ததால் தற்போது நிலைமை சீராகியதை அடுத்து தங்கள் சொந்த தொகுதிகளுக்கு செல்லும் எம்எல்ஏக்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவருக்கு எத்தனை செல்வாக்கு இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சிறைபிடிப்பது, முற்றுகையிடுவது உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வந்த எம்.எல்.ஏ. விஜயகுமாரின் காரை மக்கள் சிறைப்பிடித்தனர். குடிக்க தண்ணீர் இன்றி தவித்தபோது கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ.,தங்களுக்கு தேவையில்லை என்றும் வளர்ப்புத் தாய் இறந்தபோதுகூட வராமல் கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து சசிகலா ஆதரவு அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பெருமாநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கார் விடுவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications