திருவள்ளுவர் தினம்: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தருண் விஜய் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை: திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் உலகின் பலநாடுகளில் அவர்களது மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு உலகையே வலம் வருவதால் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.
திருக்குறளை தனி ஒரு மனிதனாக, அனைத்து தரப்பு மனிதர்களுக்கும் பயன்படும் வகையில் இயற்றிய திருவள்ளுவரை தெய்வப்புலவர் என்று அழைக்கின்றனர்.

திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. திருவள்ளுவர் அவரது மனைவி வாசுகிக்கு சென்னை மயிலாப்பூரில் ஆலயம் உள்ளது. உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைப் போற்றும்வகையில், தமிழகத்தில் தை 2ஆம் தேதி வள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில், வள்ளுவர் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்தனர். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை பெசன்ட் நகர் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு உத்தரகாண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய், கவிஞர் வைரமுத்து ஆகியோர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.
மெரீனா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவரின் படத்துக்கு பா.ஜ.க எம்.பி, தருண் விஜய் தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications