க்யூட்டா விசிலடிக்கும் சென்னை ஸ்வேதா.. ஜப்பான் போட்டியில் 2 விருது வென்று சாதனை!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்வேதா சுரேஷ் என்ற இளம்பெண் ஜப்பானில் நடந்த உலக விசில் மாநாட்டில் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளில் முதல் பரிசுகளை வென்றுள்ளார்.
விசிலடித்தாலே ரவுடித்தனம் எனக் கருதும் மக்களுக்கிடையே, அத்துறையிலேயே சாதித்துக் காட்டியிருக்கிறார் சென்னைப் பெண் ஒருவர்.
சென்னையைச் சேர்ந்தவர் ஸ்வேதா சுரேஷ். 24 வயதான இவர் விசுவல் கம்யூனிகேசன் மற்றும் எடிட்டிங், சவுண்ட் டிசைன் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். கர்நாடகப் பாடகியான ஸ்வேதாவிற்கு சிறுவயதிலேயே புளூட் கருவி மூலம் விசிலடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

சாதனை...
அதனைத் தொடர்ந்து தனது விசிலடிக்கும் திறமையை வளர்த்துக் கொண்ட ஸ்வேதா, தொடர்ந்து 18 மணி நேரம் விசிலடித்து, லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். இதற்காக கடுமையான மூச்சுப் பயிற்சிகளை அவர் மேற்கொண்டார். பிராணயாமா, ஜாக்கிங் மட்டுமின்றி டிரட் மில்லில் உடற்பயிற்சி செய்து கொண்டே விசிலடித்து மூச்சுப் பயிற்சி செய்துள்ளார்.

சினிமா வாய்ப்பு...
ஸ்வேதாவின் திறமையைப் பார்த்து அசந்த இசையமைப்பாளர்கள், அவருக்கு சினிமாவில் பாடகியாகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தனர். ஜில்லா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கயல் உள்ளிட்ட படங்களில் ஸ்வேதா பாடியுள்ளார்.

விருது...
இந்நிலையில் இம்மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஜப்பானில் உலக விசிலடிப்பவர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஸ்வேதா, இரண்டு பிரிவுகளில் முதலிடத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் இந்த விருதுகளைப் பெறும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமை ஸ்வேதாவிற்கு கிடைத்துள்ளது.
எதிர்காலக் கனவு...
சென்னையில் விசிலிங் பள்ளி ஒன்றைத் தொடங்கி அக்கலையை வளர்க்க வேண்டும் என்பது தான் ஸ்வேதாவின் எதிர்காலக் கனவாம். மேற்கத்திய நாடுகளில் விசிலிங்கிற்கு எனப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கலையைப் படிப்பதற்காக பலர் அந்நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். எதிர்காலத்தில் இது போன்ற பள்ளி ஒன்றை தமிழகத்தில் திறந்தால், இங்கும் இந்தக் கலையை மேலும் வளர்க்க முடியும்' என நம்பிக்கையுடன் பேசுகிறார் ஸ்வேதா.












Click it and Unblock the Notifications