காங்கிரஸிலிருந்து யாராவது ஜெயிக்க வேண்டும் என்றால் இவர் வெல்லட்டும்..!
சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து யாராவது ஜெயிக்க வேண்டும் என்றால் அது ராம சுகந்தனாக இருக்கலாம்... உண்மையிலேயே காங்கிரஸ் கட்சி அருமையான ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளது தர்மபுரி தொகுதிக்கு.
தமிழக காங்கிரஸ் கட்சியில் சிங்கம் போல செயல்பட்ட மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்தான் ராம சுகந்தன். மிக நீண்ட காத்திருக்குப்புக்குப் பின்னர் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் கெளரவம் கிடைத்திருக்கிறது.
இவர் சிறந்த வேட்பாளர் என்று சொல்வதற்கு பல காரணங்களைக் கூறலாம். அதில் சிலவற்றைப் பார்ப்போம்....

கோஷ்டி சேர்க்காத தலைவர்
காங்கிரஸ் கட்சி என்றாலே கோஷ்டிகள்தான் நினைவுக்கு வரும். ஆனால் ராம சுகந்தனை எந்தக் கோஷ்டியிலும் காண முடியாது. யாருடனும் கோஷ்டி சேராத ஒரு இளம் தலைவர்தான் ராம சுகந்தன்.

அமைதியான வழியில்
மற்றவர்களைப் போல ஆர்ப்பாட்டம், ஆடம்பரம், டாம்பீகம் என்று இல்லாமல் மிக மிக அமைதியாக தனது அரசியலில் ஈடுபட்டு வரும் ஒரு தலைவர்தான் ராம சுகந்தன்.

பதவிக்காக அலையாதவர்
பதவிக்காக அலையாத ஒரு காங்கிரஸ் தலைவர் இவர் என்றால் நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இதுவரை காங்கிரஸ் கட்சியில் இவருக்கு சாதாரண பதவி கூட கொடுக்காமல்தான் வைத்துள்ளனர். இவரும் கூட அதற்காக கோபப்படவில்லை, கொந்தளிக்கவில்லை. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து வந்ததே இவரது பெருந்தன்மைக்கு ஒரு சின்ன உதாரணம்.

தான் உண்டு தன் பணியுண்டு
கோஷ்டிப் பூசலில் சிக்காமல், சாக்கடைத்தனமான அரசியலில் ஈடுபடாமல் ஐடியூட்டர் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக அமைதியாக செயல்பட்டு வருகிறார் ராம சுகந்தன்.

மக்களுக்காக பதவியைத் துறந்த தலைவரின் மகன்
மறைந்த வாழப்பாடி ராமமூர்த்தி காவிரிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தபோது எனது மக்களுக்கு உதவாத பதவி எனக்கு எதற்கு என்று அதைத் தூக்கி எறிந்தவர். அந்த பெருமைக்குரிய தலைவரின் மகனாக திகழ்வதும் ராம சுகந்தனின் நல்ல தகுதிகளில் ஒன்று.

பன்மொழி திறமை
தாய் மொழியாம் தமிழ் தவிர ஆங்கிலம், இந்தி, ரஷ்யன் என்று பல மொழிகளில் நல்ல புலமை பெற்றவர் ராம சுகந்தன்.

எம்.பி.ஏ பட்டதாரி
ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தவர் ராம சுகந்தன். தனது எம்.ஏ படிப்பை மாஸ்கோவில் முடித்தவர். லண்டனில் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதார படிப்பையும் முடித்தவர்.

வென்றது காத்திருப்பு
சாதாரண காங்கிரஸ் உறுப்பினராகவே இத்தனை காலம் இவரை வைத்திருந்த காங்கிரஸ் இன்று அவருக்கு தர்மபுரி எம்.பி. தொகுதியில், அதுவும் வலுவான பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக களம் இறக்கி உரிய அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாராட்டலாம்
பிற தலைவர்களைப் போல கோஷ்டிகளை சேர்த்துக் கொண்டு கொடி பிடித்து குட்டையைக் குழப்பாமல், பதவிக்காக ஓடாமல், பொறுத்திருந்து, கட்சிப் பணியாற்றி வரும் ராம சுகந்தன் போன்றவர்களுக்கு சீட் கொடுத்த காங்கிரஸை உண்மையிலையாே தாரளமாக பாராட்டலாம்.

இதுதான் பெஸ்ட் தேர்வு
மேலும் இதுவரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள 33 வேட்பாளர்களிலுமே ராம சுகந்தன்தான் பெஸ்ட் சாய்ஸ் என்றும் கூட தாராளமாக சொல்லலாம்.












Click it and Unblock the Notifications