எங்கு போனாலும் குழி பறிக்கத்தான் பார்ப்பார் ராமதாஸ்.. இது 2009ல் கருணாநிதி கூறியது!
சென்னை: டாக்டர் ராமதாஸ் எந்த இடத்திற்குப் போனாலும், அந்த இடத்தில் குழி பறிக்கத்தான் பார்ப்பார் என்று 2009ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதி சாடியிருந்தார்.
அந்த பிளாஷ்பேக்...
"மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று நான் கூறியதை, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஆட்சியில் அமர வேண்டும், காமராஜரின் ஆட்சி மீண்டும் உருவாக வேண்டும் என்பது தமிழகத்தில் பெரும்பான்மையான காங்கிரஸ்காரர்களின் கனவு. அவர்களின் கனவு நிறைவேற வேண்டும் என்றுதான் கூறினேன்'' -டாக்டர் ராமதாஸ், பாமக.
தற்போது டாக்டர் ராமதாஸ் இருப்பது அ.தி.மு.க. கூட்டணி. அந்தக் கூட்டணியின் தலைவர் ஜெயா. அவர் தமிழகத்திலே மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென்று துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்தக் கட்சிக்கு தற்போது போயிருக்கின்ற டாக்டர் ராமதாஸ், அந்த அம்மையாருக்கும் துரோகம் இழைக்கும் வகையிலும், அந்தக் கூட்டணியிலே இருக்கிற இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் "பெப்பே'' காட்டுகின்ற வகையிலும்- அந்தக் கூட்டணியிலே இருந்து கொண்டே, காங்கிரசாரின் கனவு நிறைவேறி தமிழகத்திலே காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டுமென்று சொல்கிறார்!
இப்போதாவது புரிகிறதா? அவர் எங்கே போனாலும், இருக்கும் இடத்திற்கு குழி பறிக்கத்தான் பார்ப்பார் என்பதற்கு இதைவிட ஒரு எடுத்துக்காட்டா வேண்டும்" என்று கூறியிருந்தார் கருணாநிதி.