வெங்காய விலை உயர்வுக்காக நாடே அழுகிறது.. ஆனால் வாட்ஸ் அப்பில் சிரிப்பாய் சிரிக்கிறது!
சென்னை: வெங்காய விலை உயர்வால் நாடே அழுது கொண்டிருக்கிறது. ஆனால், இதையும் வழக்கம் போல நம்ம வாட்ஸ் அப் மக்கள் காமெடியாக வறுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக வாட்ஸ் அப்பில் லகலக கதை ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது.
இதோ, அந்தக் கதை உங்களுக்காகவும்...
ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க. ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.
அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு. அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.
சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.
போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு. அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.
தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம். இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,"ஓ..." ன்னு அழுதுச்சு.
அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.
(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க)
மேலும் சிறிது காலங்களுக்கு பிறகு மக்கள் சுடு தண்ணீரில் வெங்காயத்தை போட்டு அழுகாமல் தப்பித்து வந்தனர். இதை பார்த்து வெங்காயத்துக்கு கோபம் வந்தது. கடவுளிடம் சென்று முறையிட்டது. கடவுள் கோபம் கொண்டு சாபம் இட்டார். இனிமேல் வெங்காயம் வாங்கும் போதே மக்கள் கண்ணீர் விடுவார்கள் . இது கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் அமல் படுத்தப்பட்டுஉள்ளது.
இதெப்படி இருக்கு...!