புயல், வறட்சியின் போது பிரதமர் தமிழகம் வராதது ஏன்? திருமாவளவன்
வெள்ளம், வறட்சி பாதிப்புகளின் போது தமிழகம் வராத பிரதமர் தற்போது வருவது, எந்த அளவிற்கு அவர் உள்வாங்கிய மதம் சார்ந்த சிந்தனைகள் மேலாதிக்கம் செய்கிறது என்பதை காட்டுகிறது என திருமாவளவன் கூறியுள்ளார்.
கோவை: புயல், வறட்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர முனைப்பு காட்டவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தால் பிரம்மாண்டமான சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
எதிர்ப்புகளை மீறி கோவையில் உள்ள ஈஷா யோக மையத்துக்கு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதை தனது டுவிட்டர் பக்கத்திலும் உறுதி செய்துள்ளார்.
இந்தநிலையில் கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: வெள்ளம், வறட்சி என்ற பாதிப்புகளின் போது தமிழகம் வராத பிரதமர் தற்போது வருவது, எந்த அளவிற்கு அவர் உள்வாங்கிய மதம் சார்ந்த சிந்தனைகள் மேலாதிக்கம் செய்கிறது என்பதை காட்டுகிறது.
ஆளுநர் அறிக்கையில் சட்டமன்ற நடவடிக்கைகள் சட்டப்பூர்வமாக, ஜனநாயக பூர்வமாக நடந்து இருக்கின்றதா என்பதை தெரிந்து கொள்ள தமிழக மக்கள் ஆவலாக இருப்பதாக திருமாவளவன் கூறினார்.
மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்த தீபா, ஏன் கட்சி துவங்குகின்றார் என்பது தெரியவில்லை. தமிழக அரசு இன்னும் வீரியமாக செயல்பட வில்லை, மந்தநிலையில் இருக்கின்றது. சுகாதாரத்துறை பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை தொடரும் என்ற அறிவிப்பினை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.