மதவாதமும், மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது: திருமாவளவன்
சென்னை: மதவாதமும் மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தனது 54வது பிறந்த நாளை முன்னிட்டு அடையாறில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொல்.திருமாவளவன் பிறந்த நாளை ஆகஸ்டு 17 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டும் நள்ளிரவில் திருமாவளவன் பிறந்தநாள் வழக்கமான உற்சாகத்துடன் களை கட்டியது.
இந்த ஆண்டு அவரது 54வது பிறந்த நாளை முன்னிட்டு மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்த உள்ளனர்.

விடிய விடிய கொண்டாட்டம்
தொல். திருமாவளவனின் பிறந்தநாளை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய கொண்டாடினர். தொண்டர்கள் அளித்த மலர்கொத்துக்கள், சால்வைகளை திருமாவளவன் ஏற்றுக்கொண்டார்.

அம்மா கொடுத்த புத்தாடை
திருமாவளவனின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அம்மா பெரியம்மாள் நள்ளிரவில் புத்தாடை கொடுத்து ஆசி வழங்கினார். அப்போது தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்.

அம்பேத்கருக்கு மரியாதை
இன்று காலை 8.30 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னை சாந்தோமில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினார்.

தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் திருமாவளவன், 12 மணியளவில் கோயம்பேடு காய், கனி சந்தையில் உள்ள தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதுடன் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதன் பிறகு நண்பகல் 1 மணியளவில் அசோகர் நகர் அம்பேத்கர் திடலில் கட்சித் தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெறுகிறார்.

மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு
இன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறார். மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குவதுடன் மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகளான மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.

சிறுபான்மையினர் மீது தாக்குதல்
அம்பேத்கர் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், மதவாதமும் மதவெறி அரசிலும் நாடு முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது என்று குற்றம் சாட்டினார்.

வன்முறை அதிகரிப்பு
நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்கள் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications