காதலியைப் பார்ப்பதற்காக... தூத்துக்குடி தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பள்ளியில் உள்ள தனது காதலியைப் பார்ப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருநெல்வேலி மாநகர காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர், தூத்துக்குடியில் இயங்கும் 4 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை இன்று மாலை 4 மணிக்குள் வெடிக்குமென்றும் மிரட்டல் விடுத்தார்.

உடனடியாக இது தொடர்பாக தூத்துக்குடி போலீசாருக்கு தெரிவிக்கப் பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் தூத்துக்குடியில் இயங்கி வரும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வெடிகுண்டுகளோ அல்லது சந்தேகத்திற்குரிய வகையில் ஏதேனும் பொருட்களோ சிக்கவில்லை. எனவே, தொலைபேசி மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது.
இதையடுத்து, மிரட்டல் விடுக்கப்பட்ட தொலைபேசி எண் தூத்துக்குடி வட்டக்கோயில் அருகே உள்ள ஒரு பொதுத் தொலைபேசியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள தனியார் பள்ளியின் வாசலில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போன் செய்த மர்மநபர் பைக்கில் வந்து இறங்கி காயின் பாக்ஸ்சில் போன் செய்துவிட்டு 10 நொடிகளுக்குள் அந்த இடத்தைவிட்டு செல்வது பதிவாகியிருந்தது.
இதன் அடிப்படையில், மர்மநபரின் பைக் எண்ணை வைத்து போலீசார் அவரது முகவரியைக் கண்டுபிடித்தனர். அப்போது, மிரட்டல் போன் செய்தது தூத்துக்குடி அன்னை தெரசா காலனியை சேர்ந்த பீட்டர் மகன் கிளாரன்ஸ் (20) என்பது தெரியவந்தது. கிளாரன்ஸைக் கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் வெளியானது.
அதாவது, கிளாரன்சின் தந்தை பீட்டர் கடந்த மார்ச் மாதம் தாளமுத்து நகரில் உள்ள கிணற்றில் விழுந்து இறந்துவிட்டார். கிளாரன்சும் அவரது 4 சகோதரர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். கிளாரன்ஸ் அப்பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் காதலியை அவரால் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் போன் செய்தால் விடுமுறை அளிக்கப்படும். அப்போது காதலியை சந்திக்கலாம் என நினைத்து கிளாரன்ஸ் அவசர எண் 100-க்கு போன் செய்து உள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்ட அவசர எண் பிஸியாக இருந்ததால் அந்த அழைப்பு தானாகவே நெல்லை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுள்ளது.
அங்கு போலீசாரிடம் பேசிய கிளாரன்ஸ் ஒரு பள்ளியை மட்டும் குறிப்பிட்டால் சிக்கிவிடுவோம் என 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
பள்ளியின் முன் சி.சி.டி.வி. காமிரா இருந்ததால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சில மணி நேரத்திலேயே கிளாரன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications