எட்டுக்குடி, விராலிமலை முருகன் கோவில்களில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற சூரசம்ஹாரம்!
நாகை/புதுகை: எட்டுக்குடி மற்றும் விராலிமலை முருகன் கோவில்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி சுப்பிரமணியன் சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது.
இதையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் தெய்வானை திருக்கல்யாண வைபமும் நடைபெற்றது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சூரசம்ஹாரத்தையொட்டி மலை மேல் உள்ள விநாயகர், முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்விக்கப்பட்டு தங்கக் கவசம் சாத்தப்பட்டது.
பின்னர் மாலை 5 மணியளவில் அலங்கார பல்லக்கில் சுவாமி மலையை வலம் வந்தார். இதைத் தொடர்ந்து சூரனை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
எட்டுக்குடி மற்றும் விராலிமலை முருகன் கோவில்களில் நடைபெற்ற இந்த சூரசம்ஹார நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி இரு ஆலயங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.












Click it and Unblock the Notifications