கம்பராமாயணத்திலேயே தோழர் என்ற வார்த்தை உள்ளது.. கோவை கமிஷனருக்கு முத்தரசன் பதிலடி
கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தனது பேட்டியின்போது மாணவர்கள், அவர்களிடம் யாராவது தோழர் என்று வந்து அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என கூறியிருந்தார்.
மதுரை: கம்ப ராமாயணத்தில் கம்பனே உயிர்காப்பான் தோழன் என்று கூறியுள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீதான, போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக மதுரையில் இன்று, மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் முத்தரசன் கூறியதாவது:
தோழர் என்ற வார்த்தைக்கு எதிராக காவல்துறை அதிகாரி கருத்து கூறியது சரியில்லை. தோழர் என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது.

கம்பன் கூறிய வார்த்தை
தந்தை பெரியார் தோழர்களே என்றுதான் அழைப்பார். கம்பராமாயணத்தில் கம்பன், 'உயிர் காப்பான் தோழன்' என்று கூறியுள்ளார். எந்த உறவையும் கூட இப்படி கம்பன் உயர்த்தி கூறவில்லை. தமிழக சட்டசபையில் பிடல் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி தீர்மானம் நிறைவேற்றும்போது தோழர் காஸ்ட்ரோ எனறுதான், கூறப்பட்டது. ஆனால் தோழர் என்ற வார்த்தைக்கு பொருள் தெரியாத அதிகாரி அதை தவறாக கூறியுள்ளார். அதிகாரிகளின் திசை திருப்பும் பேட்டிகளை கண்டிக்கிறோம்.

பெண்கள் தீவிரவாதிகளா?
கோவையில் மார்க்சிஸ்ட், இ.கம்யூ, வி.சிறுத்தை தோழர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளார்கள். சென்னையில் மீனவர்கள், பெண்களை தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளா? போலீசார் மோசமான, கொடூரமான தாக்குதல் நடத்தியடோது. தீ வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரணம்
இத்தைகைய காவல்துறை கா்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மக்கள் நல கூட்டணி சார்பில் சென்னை, கோவை, மதுரையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. காவல்துறையின் கொடுமைகள் பற்றி, விரிவான நீதி விசாரணை நடைபெற வேண்டும். தப்பு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம். இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

விடுதலை
போராட்டக்காரர்களில் 156க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலரை போலீசார் தேடிக்கொண்டுள்ளனர். இதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். மத்திய அரசுக்கு அடிபணிந்து தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், தனது பேட்டியின்போது மாணவர்கள், அவர்களிடம் யாராவது தோழர் என்று வந்து அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டித்துவிடுங்கள் என கூறியிருந்தார். இது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications