கடன் கேட்டு தர மறுத்த சகோதரன் கொலை .... 3 பேர் கைது
சேலம்: சேலம் அருகே கடன் கேட்டு தர மறுத்த சகோதரனை குடி போதையில் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலையை அடுத்த மொட்டையன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு ஈஸ்வரன், சென்னிமலை , சந்திரன் , பழனியப்பன் என நான்கு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந்தராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில், அவருக்குச் சொந்தமான 16 சென்ட் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.18 லட்சத்துக்கு நான்கு பேரும் சேர்ந்து விற்றனர். அந்த தொகையை 4 சகோதரர்களும் பிரித்துத்துக் கொண்டனர். அதில், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3.90 லட்சம் கிடைதுள்ளது. இதில், ஈஸ்வரன், சந்திரன், பழனியப்பன் ஆகியோர் நிலத்தை விற்ற பணத்தில் தங்கள் கடனை அடைத்தனர்.
அதையடுத்து, சென்னிமலை வைத்திருந்த ரூ.3.90 லட்சம் பணத்தில் இருந்து ஈஸ்வரன், சந்திரன், பழனியப்பன் ஆகியோர் தலா ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளனர். ஆனால் அவர் அந்த பணத்தை வைத்து தொழில் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சகோதரர்களுக்குள் இந்த பணம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த மூன்று பேரும் ஆத்திரத்தில் சென்னிமலையை அடித்துக் கொலை செய்தனர். இது தொடர்பாக, இரும்பாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஈஸ்வரன், சந்திரன், பழனியப்பன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.