ஜி.கே. வாசன் ஆதரவு 3 முன்னாள் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் ஐக்கியம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிவராஜ், பாளை டி. அமரமூர்த்தி, கே. வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களில் சிவராஜ், ரிஷிவந்தியம் தொகுதியில் 1984, 1996,2001, 2006ஆம் ஆண்டுகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பாளை அமரமூர்த்தி அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக 12 ஆண்டுகளாக பணியாற்றியவர். 1996 மற்றும் 2006ஆம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். லால்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாக 1984ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் கே. வெங்கடாச்சலம்.
இந்த மூன்று பேரும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தவர்கள். ஆனால் இந்த முன்னாள் எம்.எல்.ஏக்களை ஜி.கே.வாசன் கண்டு கொள்ளவே இல்லையாம். அத்துடன் ஜி.கே.வாசன் எப்படியும் தனிக்கட்சி தொடங்குவார் என்றும் காத்தும் பார்த்தனர்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை என்ற விரக்தியில்தான் மூன்று முன்னாள் எம்.எல்.ஏக்களும் தங்களது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.