ஆம்பூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மாயம்
ஆம்பூர்: ஆம்பூர் அருகே பள்ளிக்குச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரும் கடத்தப்பட்டதாக பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த மாதனூர் கீழ்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (62). இவரது மகன் மற்றும் மகள் வழி பேரன்கள் அஜித்குமார் (17), தினேஷ்குமார் (13), தேவராஜ் (13). மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அஜித்குமார் 11ம் வகுப்பும், தேவராஜ் 9ம் வகுப்பும், அதே பகுதியில் உள்ள தாகூர் நேஷனல் அரசு நிதியுதவி பள்ளியில் தினேஷ்குமார் 9ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
மாணவர்களின் வீடு அருகருகே இருப்பதால் 3 பேரும் ஒன்றாக பள்ளிக்குச் சென்று வீடு திரும்புவது வழக்கம். கடந்த 15ம் தேதி காலை பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் 3 பேரும் மாலை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
பள்ளி முடிந்ததும் 3 பேரும் ஒன்றாக வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர், அவர்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு குடியாத்தம் நோக்கிச் சென்றதாக பார்த்தவர்கள் கூறினர். இதனால், மாணவர்கள் 3 பேரும் கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் மாதவன் நேற்று காலை புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது அவர்களாக எங்காயாவது சென்றுவிட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரக்கோணம் பகுதியில் தனியார் பள்ளி மாணவர் கடத்தப்பட்ட நிலையில், ஆம்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் காணாமல்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications