தமிழ்நாட்டில் கைநாட்டு ஆட்சி நடப்பது கேவலம்- ஈவிகேஎஸ் இளங்கோவன் தாக்கு
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவர காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும் என்று தமிழகத்தில் கைநாட்டு ஆட்சி நடைபெறுகிறது என்றும் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்று
சென்னை : தமிழ்நாட்டில் கை நாட்டு ஆட்சி நடைபெறுவதாக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ராகுல் காந்தி மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆரப்பாட்டத்தில் நக்மா, குஷ்பு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம்
ஒரே பதவி - ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். அதில் பங்கேற்ற ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ராம் கிஷன் கிரேவால் திடீரென தற்கொலை செய்து கொண்டார். ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டி இம்முடிவை எடுத்ததாக அவர் தனது தற்கொலை குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் கைதுக்கு கண்டனம்
ராணுவ வீரரின் இழப்பால் வாடி நிற்கும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை போலீஸார் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து பின்னர் விடுவித்தனர். இதன் விளைவாக இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில், ராகுல் காந்தி மீது எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இணைந்த தலைவர்கள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ராகுல் காந்தி மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆரப்பாட்டத்தில் நக்மா, குஷ்பு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் அக்கட்சி சார்பாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இளங்கோவன் பேச்சு
தமிழக தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்கும் கூட்டம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேடையில் மைக் பிடித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல்காந்தியை மோடி அரசாங்கம் தடுத்தது. அவரை 3 முறை கைது செய்தனர். இது என்ன நாடா அல்லது காடா என்று கேட்கிறேன்.

பிரதமர் ஆவார் ராகுல்காந்தி
ராகுல்காந்தி எந்த விளம்பரமும் இல்லாமல் கூட்டம் சேர்க்காமல் தனியாக ஆறுதல் கூறச் சென்றார். அவரை சிறை பிடிப்பதா? அவர் இன்றைக்கு லோக்சபா எம்.பியாக இருக்கிறார். இன்னும் இரண்டரை ஆண்டுகளில் அவர் இந்த நாட்டின் பிரதமராக பதவியில் அமருவார். அவரை கைது செய்வதா? என்று கேள்வி எழுப்பினார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

கை நாட்டு ஆட்சி
மத்திய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு மாறினார், தமிழ்நாட்டில் கை நாட்டு ஆட்சி நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா, விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம். அதே நேரத்தில் அவர் கை நாட்டு வைத்து ஆட்சி நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினார்.












Click it and Unblock the Notifications