செல்போனில் வடிவேலு காமெடியை பார்த்து சிரித்த மாணவியை தாக்கிய டிக்கெட் பரிசோதகர்கள்
சென்னை: ரயில் நிலையத்தில் செல்போனில் வடிவேலு காமெடியை பார்த்து சிரித்த கல்லூரி மாணவியை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கியதில் அவர் காது கேட்கும் திறனை இழந்துள்ளார்.
சென்னை ராஜமங்கலம் 7வது தெருவை சேர்ந்த சரஸ்வதி(45) என்பவரின் மகள் ரக்ஷனா(19) ராணி மேரி கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி அவரை பார்க்க தோழிகள் 3 பேர் அவரின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
தோழிகளை வழியனுப்பி வைக்க ரக்ஷனா அவர்களுடன் வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு ரயிலுக்கு காத்திருந்தபோது ரக்ஷனா மற்றும் தோழிகள் பணத்தட்டுப்பாடு மீம்ஸ் தொடர்பான வடிவேலு காமெடியை செல்போனில் பார்த்து சிரித்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக சென்ற டிக்கெட் பரிசோதகர் வசந்தா(40) ரக்ஷனா தன்னை கிண்டல் செய்து சிரிப்பதாக தவறாக புரிந்து கொண்டார். ரக்ஷனா வடிவேலு காமெடியை பார்த்து சிரித்ததாக கூறியும் வசந்தா அவரின் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று தனது அறைக்குள் வைத்து பூட்டினார்.
மேலும் தன்னுடன் பணியாற்றும் டிக்கெட் பரிசோதகர்களான விஜயகுமார் மற்றும் சித்ரா ராஜேஸ்வரியை அங்கு வரவழைத்து மூன்று பேருமாக சேர்ந்து ரக்ஷனாவை அடித்துள்ளனர். ரக்ஷனாவின் தலையை பிடித்து சுவரில் மோதியுள்ளனர்.
மாணவி அலறும் சப்தம் கேட்டு ரயிலுக்காக காத்திருந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ராமலிங்கம் அங்கு வந்து தட்டிக் கேட்டதற்கு அந்த 3 பேரும் அவரையும் தாக்கி காயப்படுத்தினர்.
இங்கு நடந்ததை யாரிடமும் கூறக் கூடாது, கூறினால் நுங்கம்பாக்கம் சுவாதி நிலைமை தான் என்று மிரட்டி ரக்ஷனா மற்றும் ராமலிங்கத்தை அறையில் இருந்து வெளியே தள்ளியுள்ளனர். இதற்கிடையே காயம் அடைந்த இருவரும் மயங்கினர்.
ராமலிங்கத்தை பொது மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே தோழிகள் மூலம் விபரம் அறிந்து வந்த ரக்ஷனாவின் பெற்றோர் தங்களது மகளை மீட்டு பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு வலது காதில் கேட்கும் திறன் போய்விட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.