பாஜகவை நான் பார்த்துக் கொள்கிறேன்... திப்பு சுல்தானில் ரஜினி நடிப்பார்! - தயாரிப்பாளர்
ரஜினி நடிக்க திப்பு சுல்தான் படம் திட்டமிட்டபடி உருவாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜகவினரை நான் பார்த்துக் கொள்கிறேன்.. என்று தயாரிப்பாளரும் தொழிலதிபருமான அசோக் கெனி தெரிவித்துள்ளார்.
திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து பிரமாண்டமாக படம் எடுக்க வேண்டும் என்று கடந்த 2011-ம் ஆண்டே அசோக் கெனி திட்டமிட்டார். இதனை ரஜினியிடம் கூற, அவரும் ஆர்வத்துடன் சம்மதித்தார்.

ஆனால் அதன் பிறகு ரஜினி ராணாவை அறிவித்தார். பின்னர் உடல் நலம் சரியில்லாமல் போய், கோச்சடையான், ராணா வந்ததெல்லாம் தெரிந்த சமாச்சாரங்கள்.
இப்போது ரஜினி மீண்டும் முழு வேகத்துடன் புதுப்புது படங்களில் நடித்து வருகிறார். இப்போது கபாலியில் நடிக்கும் அவர், அடுத்த நான்கு மாதங்களில் எந்திரன் 2 நடிக்கிறார். மேலும் சில படங்களில் நடிக்கும் திட்டத்தில் உள்ளார்.
இந்த நிலையில், திப்பு சுல்தான் படத்தை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து ரஜினியுடன் பேசவிருப்பதாக அசோக் கெனி தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியதோடு, பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியது.
இந்த நிலையில் திப்பு சுல்தான் படத்தை உருவாக்குவதில் உறுதியுடன் இருப்பதாக அசோக் கெனி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் முதலில் மாவீரன் சிவாஜியின் வாழ்க்கையைத்தான் ரஜினியை வைத்துப் படமாக்க வேண்டும் என விரும்பினேன். அதை ரஜினியிடம் கூறியபோது 'வேண்டாம்... சிவாஜி காலத்தில் அவருக்கு இஸ்லாமியர்களோடு மோதல் இருந்தது. அப்படிக் காட்சிகள் வேண்டாம். அதைவிட திப்பு சுல்தான் கதையை படமாக்கினால் நன்றாக இருக்கும். அனைத்து மதத்தவர்களையும் அரவணைத்தவர் திப்பு,' என்று ரஜினிதான் கூறினார்.
இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக உள்ளிட்டோரை நான் பார்த்துக் கொள்கிறேன். திட்டமிட்டபடி படத்தில் ரஜினி நடிப்பார்,' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications