குடி போதையில் சண்டை போட்ட கணவரை இரும்புத்தடியால் அடித்துக் கொன்ற மனைவி கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குடிபோதையில் வந்து சண்டையிட்ட கணவரை இரும்புத்தடியால் அடித்துக் கொன்ற மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜ்மோகன், 40; இவரது மனைவி செல்வி, 40. இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி ஸ்ரீமதி என்ற ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், ராஜ்மோகனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, சபரி, 9, கரிகாலன், 5, என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். முதல் கணவருக்கு பிறந்து தற்போது, 19 வயது உள்ள பெண் குழந்தையுடன் சேர்த்து, மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
ராஜ்மோகன் கோவையில் ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்கு விடுமுறை சொல்லி விட்டு மனைவி குழந்தைகளை பார்க்க, திருச்செங்கோடு வந்த ராஜ்மோகன் தொடர்ந்து குடித்து விட்டு போதையில் இருந்துள்ளார்.
மனைவி செல்வியின் நடத்தையை சந்தேகப்பட்டு சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்த ராஜமோகன், கடந்த ஞாயிறு அன்று குடிபோதையில் வந்து மீண்டும் செல்வியை சந்தேகப்பட்டு சண்டை போட்டுள்ளார். மேலும், வாக்குவாதத்தின் போது செல்வியை இரும்புக் கம்பியால் தாக்க முயன்றுள்ளார்.
அப்போது தன்னை காத்துக்கொள்ள எண்ணிய செல்வி ராஜமோகனிடம் இருந்த இரும்புக் கம்பியை பிடுங்கி ராஜமொகனை தாக்கியுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையில் படுகாயம் அடைந்த ராஜமோகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராஜமோகனின் சடலத்தை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக செல்வி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து, சேலம் மத்திய பெண்கள் சிறையில் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.