விடுதலைச் சிறுத்தைகள் சேலம் மாநாடு – 144 தடை உத்தரவுக்கு திருமாவளவன் எதிர்ப்பு!
சென்னை: சேலத்தில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெறும் நிலையில் 144 தடையாணை பிறப்பித்துள்ளதற்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி மாநாடு நாளை சேலத்தில் நடைபெறுகின்றது. இந்த நிலையில் சட்ட ஒழுங்கு கருதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியதாவது:
சேலத்தில் நடைபெறும் கல்வி உரிமை மாநாட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அம்மாநாட்டில் கலந்து கொள்வோர் வாடகை கார்களில் வரக்கூடாது என்றும் சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரணையின் போது குறிப்பிட்டார்.
ஆனால் நீதிபதி ராமசுப்பிரமணியம் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. திறந்த வாகனங்களில் வரக்கூடாது, ஆயுதங்கள் எடுத்து வரக்கூடாது போன்ற வழக்கமான நிபந்தனைகள் மட்டுமே நீதிபதி விதித்தார். மற்றபடி வாடகை வாகனங்களில் வரலாம் என்று அனுமதித்துள்ளார்.
ஆனாலும் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற தீர்ப்பை அவதிமதிக்கும் வகையில் 144 ஏ பிரிவின் கீழ் ஒரு ஆணை பிறப்பித்துள்ளார். அதாவது வாடகை கார்களில் சுற்றுலா வட்டிகளில் ஆம்னி பஸ், போன்ற வாகனங்களில் சேலம் மாவட்ட எல்லைக்குள் நுழையக்கூடாது என்றும் இரு சக்கர வாகனங்களிலும் வரக்கூடாது என்றும் அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தலித் மக்களின் மீது விடுதலை சிறுத்தைகள் மீதும் ஏவப்படும் உச்சபட்சமான ஒடுக்கு முறையாகும். தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பு எப்போதும் நடந்திராத கொடுமையாகும்.
சேலம் மாவட்ட ஆட்சியரின் ஆணையை சுட்டிக்காட்டி தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் விடுதலைசிறுத்தைகளின் மாநாட்டிற்கு போகக்கூடாது என வாடகை வண்டி ஓட்டுநர்களை அச்சுறுத்துகிறார்கள்.
காவல் துறையின் ஜனநாயக விரோத நடவடிக்கையை விடுதலை சிறுத்தைகள் வன்மையாக கண்டிக்கிறது. ஆங்காங்கே மாநாட்டிற்கான விளம்பர பேனர்களையும் காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் அப்புறப்படுத்துகின்றனர்.
பிற கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பலகைகளை வைக்க அனுமதிக்கிற தமிழக அரசு விடுதலை சிறுத்தைகள் மீது ஏன் இவ்வளவு காட்டமான அடக்கு முறையை ஏவுகிறது என்று விளங்கவில்லை.
எத்தனை அடக்கு முறைகளை ஏவினாலும் விடுதலை சிறுத்தைகள் கட்டுப்பாடாக மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களிலும் மாநாட்டிற்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆணை பிறப்பித்துள்ள சேலம் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையை எதிர்த்து அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications