வைகோவின் ராஜதந்திரி பேச்சு... திருமாவளவன் சொல்வது என்ன?
சென்னை: திமுக ஆட்சியில் அமர முடியாமல் போனதற்கு நானே காரணம் என்று வைகோ சொல்வது எங்களுக்குப் பொருந்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
திருச்சியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, என்னை ராஜதந்திரம் இல்லாதவர் என கருணாநிதி நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், எனது ராஜதந்திரத்தால்தான் ஆட்சியமைக்க வேண்டிய வாய்ப்புகள் இருந்தும்கூட திமுக ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்பதை மறுக்கமுடியாது. எனது ராஜதந்திரமே திமுக தோல்விக்குக் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்த நிமிடம்வரை நமது இயக்கத்தை அழிக்க நினைத்து நிர்வாகிகளை இழுத்து வருகிறார்கள். நம்மை அழிக்க நினைத்தார்கள். அவர்கள் அழிந்து போய்விட்டார்கள். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள், உங்களுக்காக நான் இருக்கிறேன். இதுதான், நமது இயக்கத்தின் பிணைப்பு. நான் எப்போதும் கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிடமாட்டேன் என்றும் வைகோ பேசினார்
|
சமூக வலைத்தளங்களில் விவாதம்
இந்த பேச்சு புது பரபரப்பை பற்ற வைத்தது. சமூக இணையதளங்களில் வைகோவிற்கு எதிராகநெட்டிசன்கள் போஸ்ட்டுகளாகப் பதிவு செய்து விவாதித்து வருகின்றனர்.
திமுக கருத்து
வைகோவின் பேச்சு குறித்து திமுகவின் ராஜ்யசபா உறுப்பினரும், செய்தி தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அவரும் விலை போய், மற்றவர்களையும் பழியாக்கி, கூட்டணி கட்சிகளையும் பலியாக்கி, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதுதான் ராஜதந்திரம் என்றால் ராஜதந்திரத்துக்கு இதைவிட ஒரு கீழான விளக்கத்தை யாராலும் தரமுடியாது என்று கூறியுள்ளார்.
திருமாவளவன் கருத்து
தி.மு.க ஆட்சியில் அமர முடியாமல் போனதற்கு நானே காரணம் என்று வைகோ சொல்வது எங்களுக்குப் பொருந்தாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இரு கட்சிகளுக்கு மாற்று
சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை பிரகடனப்படுத்தினோம். திமுக, அதிமுகவிற்கு மாற்று என்ற கொள்கையை முன்வைத்து அரசியல் கூட்டணியாக நாங்கள் தேர்தலைச் சந்தித்தோம் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
உள்நோக்கம் கிடையாது
மக்கள் நலக் கூட்டணி உருவானதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அதைத்தான் தேர்தல் பிரசாரங்களில் பிரகடனம் செய்தோம். இதுகுறித்து, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவிடம் இன்னும் நாங்கள் பேசவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வைகோ விளக்கம்
ராஜதந்திரத்திலே திறமையானவர் கருணாநிதி. எனக்கு அவர் அளவிற்கு ராஜதந்திரம் இல்லை என்று கருணாநிதி நினைக்கிறார் என்றுதான் கூறினேன். அது பத்திரிக்கைகளில் திரித்து போடப்பட்டுள்ளது என்று இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியுள்ளார். வைகோ அடிக்கடி இப்படி வாயை விட்டு மாட்டிக்கொள்கிறாரே?