நெல்லை: அண்ணனை வெட்டி கொலை செய்த தம்பி தலைமறைவு
நெல்லை: குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்த அண்ணனை கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தம்பி தலைமறைவான சம்பவம் திருநெல்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சந்திப்பு பெருமாள் கீழரதவீதியை சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன்கள் கணேசன் (வயது25), ராஜா (20). பரமசிவன் சமீபத்தில் ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
இன்று அதிகாலை கணேசன் தனது வீட்டு மொட்டை மாடியில் படுத்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் அரிவாள் வெட்டு விழுந்து இருந்தது. மேலும் அவரது வீட்டில் வேறு ஒருவரும் இல்லை.
இதை அறிந்த அந்த பகுதி மக்கள் நெல்லை சந்திப்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரகுபதி ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்ட கணேசனை அவரது உடன் பிறந்த தம்பி ராஜாவே கொலை செய்த தகவல்கள் கிடைத்தன.
கொலை செய்யப்பட்ட கணேசன் குடும்பத்துக்கு அந்த பகுதியில் பல வீடுகள் மற்றும் வணிகவளாகங்கள் உள்ளன. இதில் இருந்து வரும் வாடகையை வைத்து கணேசனின் தாய் செல்லம்மாள் குடும்பத்தை நடத்தி வந்தார். பரமசிவன் இறந்து விட்டதால், செல்லம்மாள், கணேசனை ஏதாவது வேலை செய்யுமாறு கூறியுள்ளார்.
ஆனால் கணேசன் வேலைக்கு போகாமல், வாடகை பணத்தை வாங்கி தினசரி மது குடித்து ஊதாரித்தனமாக செலவழித்து வந்துள்ளார். இதை தட்டி கேட்ட தாயார் செல்லம்மாளையும், தம்பி ராஜாவையும் கணேசன் அடித்து உதைத்து மிரட்டி வருவாராம். குடிக்க பணம் கொடுக்கவில்லை என்றாலும் சரமாரியாக குடும்பத்தினரை தாக்குவாராம்.
இதனால் இவரை உயிரோடு விட்டால் சொத்துக்களை குடித்தே சீரழித்து விடுவார் என்று தம்பி ராஜாவுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு கணேசன் குடிபோதையில் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். அப்போது அவரது தம்பி ராஜா, பின் தொடர்ந்து சென்று அரிவாளால் சரமாரி கழுத்தை வெட்டினார்.
இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதைத்தொடர்ந்து ராஜா, அவரது தாயார் செல்லம்மாள், தங்கை அனிதா ஆகிய 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் தப்பி ஓடிவிட்டனர். போலீஸ் விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் கிடைத்தன.
இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜாவை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் இன்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications