தேர்தல் பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர் போஸ்.. பதற்றம் அடைந்த அமைச்சர்
திருப்பரங்குன்றம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம்: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் பிரச்சாரத்தின் போதே மயங்கி விழுந்தார். இதனால் உடன் இருந்த அமைச்சர் சீனிவாசன் பதற்றம் அடைந்தார்.
வரும் 19ம் தேதி திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனிவேலு மரணமடைந்தால், இடைத்தேர்தலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தது.

இந்தத் தேர்தலில் போட்டியிட ஆளும் கட்சியான அதிமுக சார்பில் ஏ.கே. போஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக சார்பில் டாக்டர் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீலனை முடிவடைந்த நிலையில், அந்தத் தொகுதியில் இரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸ் வீதி வீதியாக சென்று மக்களைச் சந்தித்து ஓட்டு வேட்டை நடத்தி வருகிறார். அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள், தலைவர்கள் என அனைவரும் அவரோடு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அனைவரும், வீடு வீடாகச் சென்று இரட்டை இலைக்கு வாக்களிக்கும் படி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலையில் ஏ.கே. போஸ் வேனில் ஏறி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு மக்களுடையே வாக்குகளை சேகரித்தார். அப்போது திடீரென அதிமுக வேட்பாளர் போஸ் வேனிலேயே மயங்கி விழுந்தார். இதனால் அமைச்சர் சீனிவாசன் பதற்றம் அடைந்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக தொண்டர்களிடையே பரபரபப்பு ஏற்பட்டது. பின்னர், அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications