பகலில் சைக்கிள் கடை ஓனர், இரவில் திருடன்.. !
திருப்பூர்: திருப்பூரில் பகல் நேரத்தில் சைக்கிள் கடை முதலாளியாகவும், இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையிலும் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இவரது மனைவி லீலாவதி, தாய் வள்ளியத்தாள், தந்தை கருப்பணன் ஆகியோருடன் செல்லமுத்துவும் சேர்ந்து, கடந்த மாதம், ஆறாம் தேதி, தங்களது தோட்டத்தில் வேலை செய்ய சென்றனர்.
மாலையில் வீடு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 64 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை காணாமல் போயிருந்தது.
இதுகுறித்து, செல்லமுத்து அலங்கியம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பொம்மு தலைமையில், தனிப்படையினர் இந்த திருட்டு குறித்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை தாராபுரம், பழநி ரோட்டில், வாகன தணிக்கையின் போது, நிற்காமல் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, பள்ளபட்டி கிராமத்தை சேர்ந்த முத்துபாண்டி என்பவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார்.
பின்னர் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில், விவசாயி செல்லமுத்து வீட்டில் திருடியது சைக்கிள் கடை வைத்துள்ள முத்துபாண்டிதான் என தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து முத்துபாண்டியை கைது செய்த போலீசார் அவர் கூறிய தகவலின்பேரில், கொள்ளை சம்பவத்திற்கு துணையாக இருந்த அவரது மனைவி சுகன்யா என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 35 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
முத்துப்பாண்டி திருட்டில் சேகரித்த நகைகளில், ஒரு பகுதியை தனது கள்ளக்காதலியிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். நகையை கைபற்ற போலீசார் அவரது கள்ளக்காதலியை தேடிவருகின்றனர்.
முத்துபாண்டி பல ஊர்களுக்கு செல்லும்போது, வீடுகளை நோட்டமிட்டுக்கொண்டு திருட்டு வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், கடந்த, 2005 ஆம் ஆண்டு முதல் தாராபுரம் சோளக்கடை வீதியில் பகலில் சைக்கிள் கடை நடத்திக்கொண்டும், இரவு நேரங்களில் சுற்றுபகுதி கிராமங்களில் திருடியும் வந்தது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications