திருப்பூரில் கலப்பு திருமணம் செய்த பெண்ணை அடித்து இழுத்துச் சென்ற உறவினர்கள்..! - சிசிடிவி காட்சி
திருப்பூர்: திருப்பூரில் மாற்றுச் சாதியைச் சேர்ந்த நபரை கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெண்ணை ,அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் சுந்தர்ராஜன் என்பவரை காதலித்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர். சுந்தர்ராஜன் வேறு சாதியை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள், உறவினர்களின் எதிர்ப்பையும் மீறி அந்த பெண் சுந்தர் ராஜனை திருமணம் செய்து கொண்டுள்ளார். தம்பதிகள் இருவரும் திருப்பூரில் உள்ள வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
செவ்வாய்கிழமையன்று மாலை ஐந்திற்கு மேற்பட்ட நபர்கள்,எந்தவித அனுமதியும் பெறாமல்,அந்த பெண் வேலை பார்த்த கார்மெண்ட் நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளனர்.மேலும் அந்த இளம்பெண்ணை தங்களுடன் வருமாறு கட்டாயப்படுத்தினர். ஒருவர் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தினார்.
ஆனால் அந்த பெண் அவர்களுடன் வர மறுப்பு தெரிவிக்கவே,அவரை வலுக் கட்டாயப்படுத்து இழுத்துச் சென்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரராஜன், கலப்பு திருமணம் செய்ததால்,தனது மனைவியின் உறவினர்கள் அவரை கடத்திச் சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் கடத்தப்பட்ட பெண்ணின் சொந்த ஊரான திருச்சிக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில் கலப்புத்திருமணம் செய்த சங்கர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் திருப்பூரில் சாதிமாறி திருமணம் செய்த பெண் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications