அனல் காற்று வீசுதே.... தீயாய் எரியும் திருவள்ளூர் 111 டிகிரி பாரன்ஹீட்
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்றும் அதிகமாக காணப்பட்டது. திருவள்ளூரில் இன்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
சென்னை: தமிழகமெங்கும் பல பகுதிகளில் வெளியே தலை காட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசுகிறது. திருவள்ளூரில் இன்று மாநிலத்திலேயே அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
2017 கோடையில் வழக்கத்தைக் காட்டிலும் வெப்ப நிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை எச்சரிக்கையை விட வெப்பத்தின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாகவே உள்ளது.
அக்னி நட்சத்திர காலம் துவங்க இன்னும் இரண்டு வாரம் உள்ளது. அதற்கு முன்பாகவே அனல் காற்று வீசி வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஆங்காங்கே விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் எங்கும் வெயில் வாட்டிவதைக்கிறது. இதனை அடுத்த திருவள்ளூரில் 111 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. வெயிலூரான வேலூரில்-108 டிகிரி பதிவானது.
திருச்சி, மதுரையில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. தஞ்சை, நாமக்கல்லில் 106 டிகிரியும், நெல்லையில் 105 டிகிரி வெயிலும் பதிவானது. ஈரோடு நகரில் 104 டிகிரியும் கோவையில் 99 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக ஜில்லென்று மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.