திருவண்ணாமலை கார்த்திகை திருவிழா: நவ.17ல் மகாதீபம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் வரும் 8ஆம் தேதி கார்த்திகை தீபம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடக்கும் இந்த தீபத்தின் கடைசி நாளான 17ஆம் தேதி அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கொடியேற்றம் தொடங்கி மகாதீபம் வரை பக்கர்கள் கூட்டம் அலைமோதும். மகாதீப தினத்தன்று கிரிவலம், மலையேற்றம் என லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
இந்த ஆண்டுக்கான விழா வரும் 8ம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி டி.ஐ.ஜி. முருகன் தலைமையில் உயர் போலீசார் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. முருகன் தலைமையில், எஸ்.பி., டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 68 உயர் போலீசார் அண்ணாமலையார் மலையின் மீது ஆய்வு பணி மேற்கொண்டனர்.
அப்போது, மகா தீபத்தின் போது வரக்கூடிய பக்தர்களின் கூட்டம், அவர்களுக்கான தண்ணீர் வசதி, பாதுகாப்பு வசதி மற்றும் போலீஸ் பூத்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு பணியை முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது, திருவண்ணாமலை எஸ்.பி. முத்தரசி கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை பெண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, எஸ்.பி. முத்தரசியை மீட்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications