திருவண்ணாமலையில் வெடிகுண்டு மிரட்டல்... போலீஸ் தீவிர சோதனை
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மர்மநபர் ஒருவர் தொலைபேசி வழியாக விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.
கடந்த வாரம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி ரயிலில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் ஸ்வாதி என்ற பெண் பரிதாபமாகப் பலியானார், 14க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. ஆயினும் பல இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. பொய்யான அழைப்புகள் மூலம் மக்களிடையே அச்சத்தை உருவாக்குபவர்களுக்கு தகுந்த தண்டனை அளிக்கப் படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காய்கறி சந்தையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு மர்மநபர் ஒருவர் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டலையடுத்து, சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், நகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப் படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications