திருடியதை விட கூடுதல் நகைகளை மஞ்சள் பையில் போட்டு ரிட்டர்ன் செய்த திருடன்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் போலீஸ் விசாரணைக்குப் பயந்து திருடிய நகைகளை விட கூடுதலாக மஞ்சள் பையில் போட்டு, திருடிய நபரே உரியவர் வீட்டு கேட்டில் மாட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கொசமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் (52). ஷோபா, பெட் தயாரித்து விற்பனை செய்து வரும் இவரது வீட்டில், கடந்த 2ம் தேதி 120 சவரன் நகைகள் திருடி போனது.

தெரிந்தவர்களே செய்த திருட்டு
சாவி மூலம் பீரோவைத் திறந்து நகைகளைத் திருடியது மூலம் ஆனந்தன் குடும்பத்தினருக்கு தெரிந்தவர்களே இந்தத் திருட்டை செய்திருக்க வேண்டும் எனப் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஊழியர்களிடம் தீவிர விசாரணை
அதனைத் தொடர்ந்து ஆனந்தனின் கடை மற்றும் ஷோபா தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவரது கடையில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தும் வாடகை வாகனங்களின் டிரைவர்கள் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

பயந்து போன கார் டிரைவர்
இதற்கிடையே, ஆனந்தன் வீட்டில் நகைகளைத் திருடிய கார் டிரைவர் அப்துல், போலீஸ் விசாரணையால் பயந்து போனார்.

மஞ்சள் பையில் போட்டு
எங்கே நாம் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் அவர், திருடிய நகைகளோடு கூடுதலாக 19 சவரன்களைச் சேர்த்து ஒரு மஞ்சப்பையில் மாட்டி ஆனந்தன் வீட்டு நுழைவுக் கேட்டில் இன்று மாட்டிச் சென்றார்.

எக்ஸ்ட்ரா நகை இருக்கே
வாசலில் கிடந்த மர்ம பையில் தங்கள் நகைகளோடு கூடுதலாக நகைகள் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்த ஆனந்தன் குடும்பத்தார் இது தொடர்பாக போலீசுக்கு தகவல் அளித்தனர்.

கைது செய்த போலீஸ்
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கார் டிரைவர் அப்துல் தலைமறைவானது தெரிய வந்தது. செல்போன் சிக்னல் மூலம் அப்துலின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

பயந்து போய் கூடுதல் நகையைத் திருப்பித் தந்தார்
போலீசாரின் விசாரணையில் ஆனந்தன் வீட்டில் நகைகளைத் திருடியதை அப்துல் ஒப்புக் கொண்டார். அதோடு போலீசாரின் விசாரணைக்குப் பயந்து கூடுதலாக நகைகளைத் திருப்பித் தந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications