கைவிட்ட திமுக..... உள்ளாட்சித் தேர்தலில் தமாகா தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி, தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது தமாகா. இதற்கு அப்போதே அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜி.கே.வாசனின் அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி அதிமுக, காங்கிரஸில் இணைந்தனர். சட்டசபை தேர்தலிலும் தமாகா படுதோல்வியைத் தழுவியது.
ஸ்டாலினுடன் சந்திப்பு
இதனால் தமாகா கலகலத்துப் போனது. எப்படியாவது கட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியில் இணைய வாசன் திட்டமிட்டார். இதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்துப் பேசினார்.
கருணாநிதி எதிர்ப்பு
ஆனால் சட்டசபை தேர்தலின் போது அழைத்தும் வராத தமாகாவை கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் திமுக தலைவர் கருணாநிதி உறுதியாக இருந்தார். அத்துடன் சட்டசபை தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என திமுக அறிவித்தது.
தனித்து போட்டி
இதனால் வேறுவழியே இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது தமாகா. இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஓரிருநாட்களில் வெளியிடப்படும் என்றும் ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.
வேறவழியில்லை...
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன், கூட்டணி வாய்ப்பு சரியாக அமையாததால் தனித்துப் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.