முழு அடைப்புக்கு 'நோ' ஆதரவு- திமுகவுக்கு குட்பை! அதிமுக முதுகில்தான் சவாரி- தமாகா திட்டவட்டம்!
தமிழகத்தில் நாளை நடைபெறும் அனைத்து கட்சிப் போராட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என தமாகா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி விவசாயிகள் பிரச்சனைகளை முன்வைத்து நாளை தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. ஆனால் இப்போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என தமிழ் மாநில காங்கிரஸ் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது முதல் திமுக கூட்டணியில் இடம்பெற பகீரத முயற்சிகளை அக்கட்சித் தலைவர் வாசன் மேற்கொண்டார். ஆனால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸை கழற்றிவிட்டு தமாகாவை உள்ளே இழுக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முயற்சித்தார். ஆனால் அப்போது ஆக்டிவ்வாக இருந்த கருணாநிதி மூலமாக இதற்கு கனிமொழி செக் வைத்தார். இதனால் தமாகா கழற்றிவிடப்பட்டது.
திமுகவுக்கு குட்பை
இதன்பின்னர் திமுகவுடனான கூட்டணி முயற்சிகளை தமாகா கைவிட்டது. அண்மையில் ஆர்கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஓபிஎஸ் அதிமுகவுக்கு ஜிகே வாசன் ஆதரவு தெரிவித்திருந்தார். தற்போது அதிமுக இரு கோஷ்டிகளும் இணைவது தொடரபாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
அனைத்து கட்சி பந்த்
இதனிடையே திமுக தலைமையில் அண்மையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.
தமாகா ஆதரவு இல்லை
இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு வர்த்தகர் சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல்கள் சங்கம் என பலதரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தரப்போவதில்லை என பாஜக அறிவித்துள்ளது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் நாளைய முழு அடைப்புப் போராட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
அதிமுக கூட்டணியில்?
ஏற்கனவே ஒன்றுபட்ட அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்வதில் பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது திமுகவுக்கு குட்பை சொல்லி அதிமுகவுடன் கைகோர்க்க க்ரீன் சிக்னல் காட்டியுள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.