அதெப்படி சைக்கிளை வாசன் வச்சுக்கலாம்.. த.மா.காவுக்கு த.மு.க. கண்டனம்!
சென்னை: எங்களது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவுடனேயே கட்சி தொடங்கப்பட்டதுமே, எங்களது கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக சைக்கிள் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்துள்ளோம். இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனது சின்னமாக சைக்கிளை அறிவித்துள்ளது மோசடியாகும் என்று தமிழக முன்னேற்ற காங்கிரஸ் நிறுவனத் தலைவரான எஸ். அருள்தாஸ் என்பவர் கூறியுள்ளார்.
13 ஆண்டு காலத்திற்குப் பின்னர் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை உருவாக்கியுள்ளார் வாசன். தனது கட்சியின் பெயர், கொடியை அறிமுகப்படுத்திய அவர் திருச்சியில் நடந்த கட்சி தொடக்க விழாவில், கட்சியின் சின்னமாக சைக்கிள் இருக்கும் என்றும் அறிவித்தார்.

கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம்தான் இறுதி செய்ய முடியும் என்பது ஒருபுறம் இருக்க, இப்போது இந்த சைக்கிளுக்காக தமாகாவும், தமுகவும் அடித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
தமிழக முன்னேற்ற காங்கிரஸ் நிறுவன தலைவர் எஸ்.அருள்தாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக முன்னேற்ற காங்கிரஸ் 2012 மே மாதம் 7-ந்தேதி துவக்கப்பட்டு முறையாக தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு, தமிழக மக்களுக்காக எங்கள் பணியினை செய்து கொண்டு இருக்கின்றோம்.
கட்சி துவக்கப்பட்ட நாளிலேயே எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக சைக்கிள் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்துள்ளோம். ந்நிலையில் ஜி.கே.வாசனின் புதிய கட்சி துவக்க விழாவில் தங்களது கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னம் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது நாட்டு மக்களையும், அவருடைய கட்சியினரையும் தேர்தல் கமிஷனையும் ஏமாற்றுகின்ற, மோசடி செய்கின்ற செயலாகும்.
தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமலே, சின்னத்தை அறிவித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே வாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications