தேர்தல் முறையில் மாற்றம் தேவை- ஆணையமே செலவுகளை ஏற்க வேண்டும்: த.மா.கா.
சென்னை: இந்திய தேர்தல் முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் தேர்தல் ஆணையமே செலவுகளை ஏற்று தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமாகாவின் செயற்குழு கூட்டம் அடையாறு ராஜரத்தினம் அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தலைமை தாங்கினார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமாகா செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கல்வி நிறுவன நன்கொடை
பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வழிவகை காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும். மத்திய அரசே பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எடுத்து செயல்பட வேண்டும். மத்திய அரசு சேவை விதிப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மீனவர் பிரச்சனை
மீனவர்களின் பிரச்சினையை இலங்கை அரசோடு பேசி நிரந்தரமாக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய விரைவான நடவடிக்கை எடுக்க இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தில் நடைபெறுகின்ற தேர்தல் களம் சம நிலையோடு போட்டியிடுகின்ற வாய்ப்பு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது.

மாற்றம் தேவை
பெரும் பணம் படைத்த வேட்பாளர்களும், அரசியல் இயக்கங்கள் மட்டுமே தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிற நிலை இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. தேர்தல் முறையில் மாற்றங்கள் தேவை. தேர்தல் ஆணையமே எல்லா கட்சிகளுக்கும் எல்லா நிலைகளிலும் சம வாய்ப்பு தந்து வேட்பாளரின் மொத்த பிரசாரத்திற்கும் வழிவகுத்து மொத்த செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்று தேர்தலை நடத்திட வழி வகை காண வேண்டும். தேர்தல் ஆணையம் பல சீர் திருத்தங்களை உடனடியாக அமலுக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகள் கடன்
விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications