தமாகாவில் இருந்து நீக்கப்பட்ட ஞானசேகரன் அதிமுகவில் இணைந்தார்!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் வேலூர் ஞானசேகரன் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
சட்டசபை தேர்தலில் எந்த அணியில் சேருவது என்பதில் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்து வந்தார் தமாகா தலைவர் ஜிகே வாசன். இதனால் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பின்னர் திடீரென மக்கள் நலக் கூட்டணி- தேமுதிகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வாசன் முடிவு எடுத்தார். இதற்கு பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், வேலூர் ஞானசேகரன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிமுகவில் எஸ்ஆர்பி
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் மீண்டும் பீட்டர் அல்போன்ஸ் இணைந்தார். எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அதிமுகவில் ஐக்கியமாகி ராஜ்யசபா எம்.பி.யாகிவிட்டார். அதேபோல் அடுத்தடுத்து பல தமாகா நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

ஞானசேகரன் நீக்கம்
இதனிடையே தாம் அதிமுகவில் இணையப் போவதாக தமாகா துணைத் தலைவர் ஞானசேகரன் அறிவித்திருந்தார். இதனால் ஞானசேகரன் நேற்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவில் ஐக்கியம்
இந்நிலையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துவிட்டார் வேலூர் ஞானசேகரன். வேலூர் சட்டசபை தொகுதியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஞானசேகரன்.

தமாகா மூத்த தலைவர்...
1996-ம் ஆண்டு ஜி.கே. மூப்பனார், தமாகாவை தொடங்கிய போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதில் இணைந்தார் ஞானசேகரன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் வாசன் மீண்டும் தமாகாவைத் தொடங்கியபோது அவருடன் கை கோர்த்தார். இதனால் கட்சியின் துணைத் தலைவர் பதவியை வாசன் அவருக்கு வழங்கினார். தற்போது தமாகாவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இணைந்திருக்கிறார் ஞானசேகரன்.












Click it and Unblock the Notifications