விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்து.. குஷ்பு வீட்டை முற்றுகையிட வந்த வீரலட்சுமி!
சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகை குஷ்புவைக் கண்டித்து தமிழக முன்னேற்றப்படை அமைப்பினர் அந்த அமைப்பின் நிறுவனர் வீரலட்சுமி தலைமையில் குவிந்தனர். இதையடுத்து போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
இந்த அமைப்பினருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டதால் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் மோதல் ஏதும் இல்லை.
அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், குஷ்பு வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள குஷ்பு வீட்டை நோக்கி வீரலட்சுமி தலைமையில் அவரது கட்சியினர் திரண்டு வந்தனர்.
ஏற்கனவே இந்த அமைப்பினர் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது பெரும் பிரச்சனையானதால், குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் குவிந்தனர். போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அறிவித்தப்படி போராட்டம் நடத்த வந்த வீரலட்சுமி அமைப்பினரைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.