சட்டசபையில் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனுக்கு இரங்கல்
சென்னை: முன்னாள் அமைச்சர் சற்குணபாண்டியன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவித்தனர். சற்குண பாண்டியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
தமிழக பட்ஜெட் கடந்த ஜூலை 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. 29ம் தேதி நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் உரை ஆற்றினார்.
இந்த நிலையில், இம்மாதம் 1ம் தேதி முதல் அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கி நடந்து வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம் என்பதால் கடந்த 3 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.
3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று செவ்வாய்கிழமை மீண்டும் கூடியது. சட்டசபை கூடிய உடன் மறைந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் மறைவுக்க இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை உறுப்பினர்கள் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.
இன்றைய தினம் கைத்தறி மற்றும் துணிநூல், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கு நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர்.
விவாதத்தின் முடிவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோர் பதில் அளித்து பேசுகிறார்கள். மேலும், தங்கள் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகின்றனர்.