தமிழக சட்டசபை தேர்தல்: தி.மு.க.வின் மெகா கூட்டணி கனவை தகர்த்து முதல் கட்ட வெற்றி பெற்ற அ.தி.மு.க.!!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி உருவாவதை தடுத்து வியூகத்தில் முதல் கட்ட வெற்றி கண்டிருக்கிறது அ.தி.மு.க. என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது.
ஆகையால் இந்த தேர்தலில் நிச்சயம் தி.மு.க.வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியினர் இருக்கின்றனர். அதே நேரத்தில் அ.தி.மு.க.வினரோ, அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டே 37 தொகுதிகளை அள்ளியிருக்கிறோம்.. ஆகையால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியே அமையும் என்கின்றனர்.

மெகா கூட்டணி
தமிழக சட்டசபை தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையில் பெரும்பான்மையான கட்சிகள் ஓரணியில் திரண்டு மெகா கூட்டணி அமைத்தால் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு 'நெருக்கடி' கொடுக்க முடியும் என்பது யதார்த்தம். தி.மு.க.வின் வாக்கு வங்கி சதவீதம் இதர கட்சிகளை விட அதிகம் என்ற போதும் ஆட்சி அமைக்க அவர்களது ஆதரவு அவசியம் என்பதும் முக்கியமானது.

அதிமுக வியூகம்
இதனால் அண்ணா தி.மு.க.வின் ஒரே வியூகம் என்பது தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்துவிடக் கூடாது என்பது மட்டுமே.

மதிமுக
தி.மு.க.வுடன் நிச்சயம் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ம.தி.மு.க. மெல்ல மெல்ல அந்த மாயையை உடைத்து தனி ஆவர்த்தனத்துக்கு தலைமை வகிக்கத் தொடங்கிவிட்டது. இந்த அணியில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சியும் கை கோர்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்த அணி அப்படியே தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் நிச்சயமாக தி.மு.க.- அ.தி.மு.க.வுடன் கூட்டணியே கிடையாது என்று பகிரங்கமாக அறிவித்திருப்பதுடன் நாங்கள் 3வது அணி என்றும் பிரகடனம் செய்திருக்கிறார்கள். இந்த அணியில் தே.மு.தி.க. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸை கொண்டுவரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேமுதிக
தே.மு.தி.க.வைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் எந்த பக்கம் சாய்கிறதோ அந்த பக்கம் சாயும் என்ற நிலை இருந்தது; இதனால் அது தி.மு.க. அணியில் உறுதியாக இடம்பெறும் எனக் கூறப்பட்டது;

பாஜகவுடன்...
ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து பேசியிருக்கிறார்; தற்போது இன்னமும் பா.ஜ.க. அணியில்தான் தே.மு.தி.க. இருக்கிறது என்று தொடர்ச்சியாக அக்கட்சியினர் கூறிவருகின்றனர். ஆனாலும் விஜயகாந்த் மறுப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். 'சிலபல' எதிர்கால நலன் கருதி ஒருவேளை பா.ஜ.க. அணியிலேயே விஜயகாந்த் நீடிப்பதற்கே அதிகம் வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தே.மு.தி.க. தலைமையில் ம.தி.மு.க, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் என பெரும்பான்மை கட்சிகள் இணைந்தால் தி.மு.க. நிலைமை மிகவும் பரிதாபம்..
தி.மு.க.வை நோக்கி நகர்ந்த இந்த கட்சிகள் மெல்ல மெல்ல ஆசைகாட்டி நம்பிக்கையை விதைத்து இப்போது நட்டாற்றில் விட்டுவிட்ட நிலைமைதான் தி.மு.க.வுக்கு..

பாமக
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில் தனி ஆவர்த்தனம் என்பதில் இன்னமும் உறுதியாக இருக்கிறது. பாரதிய ஜனதாவோ தேர்தல் மூலம் வேர்பிடிக்க வாய்ப்பிருக்கிறதா என்ற நிலையில்தான் இருக்கிறது.

முதல் வெற்றி
ஆக தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைப்பதைத் தடுத்து நிறுத்தி அதன் நம்பிக்கையைத் தகர்த்து தங்களது 'வியூகத்தில்' முதல் கட்ட வெற்றியை எட்டியிருக்கிறது அ.தி.மு.க. என்பதே யதார்த்தம்.












Click it and Unblock the Notifications