தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பரிலாவது நடைபெறுமா?
தமிழக சட்டசபை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருப்பதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் என்பது வழக்கமாக அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும். ஆனால அதிமுக ஆட்சிக் காலத்தில் இப்படியாக முறைப்படி கூட்டத் தொடர் காட்டுவதில் பெரிய அக்கறை எதுவும் இல்லாத நிலையே இருந்து வருகிறது.
குளிர்கால கூட்டத் தொடர் நடத்தியாக வேண்டும் என்பதால் டிசம்பரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பரிலாவது நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அறிகுறியே இல்லையே...
ஏனெனில் தலைமை செயலக வட்டாரங்களில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதற்கான எந்த ஒரு அறிகுறியுமே தென்படவில்லை. இது தொடர்பாக சட்டசபை ஊழியர்களிடம் நாம் பேசிய போது, ஆண்டுக்கு இரண்டு கூட்டத்தொடர் நடத்தப்ப வேண்டும் என்பது சட்டசபை விதி.
அவகாசம் இருக்கிறதுதான்...
ஒரு கூட்டத்துக்கும் அடுத்த கூட்டத்துக்குமான கால இடைவெளி 6 மாதங்கள். அப்படி கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 2-ந்தேதியோடு முடிவடைந்தது. அதன் அடிப்படையில் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி மாதத்துக்குள் நடத்த கால அவகாசமிருக்கிறது.
கவனமே இல்லையே...
அதே நேரத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரை, மார்ச்சில் பட்ஜெட், பட்ஜெட் கூட்டத்தொடர் என நடத்தப்பட வேண்டும். அதனால், குளிர்கால கூட்டத்தை டிசம்பர் முதல்வாரத்தில் நடத்தினால் தான் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டங்கள் சரியான நேரத்தில் துவங்கி சரியான நேரத்தில் முடிக்க ஏதுவாக இருக்கும். ஆனால் அதிகாரிகளோ இந்த நிமிடம் வரை இதில் கவனம் செலுத்தவே இல்லை.
டிஸ்சார்ஜ்-க்கு பின்தானோ?
இதனால் இந்த ஆண்டுக்கான குளிர் காலக்கூட்டத்தொடர் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஒருவேளை குளிர்கால கூட்டத் தொடரையே நடத்தாமலே விட்டுவிடுவார்களோ என்ற சந்தேகமும் இருக்கிறது என்கிறார்கள். உயரதிகாரிகள் தரப்பில் விசாரித்தால், இது பற்றி பொறுப்பு ஆளுநர் கேள்வி கேட்டிருக்கிறார். அப்பல்லோவிலிருந்து முதல்வர் டிஸ்சார்ஜ் ஆனால்தான் இதற்கு உறுதியான பதில் கிடைக்கும் என்கின்றனர்.
ஸ் அப்பா கண்ணை கட்டுதே!