தமிழக பாஜகவிலிருந்து 2 பேருக்கு 'லட்டு' கிடைக்குமாம்...!
சென்னை: தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலிமைப்படுத்தவும், பாஜகவை வளர வைக்க வசதியாகவும், 2 பேருக்கு அமைச்சர் பதவி தர பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.
அந்த இரண்டு அமைச்சர் பதவிகளை பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இல. கணேசன் ஆகியோருக்கு அளிக்கவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாம்.

தமிழகத்தில் பாஜக முதல் முறையாக மெகா கூட்டணி அமைத்தது. பெரும் எதிர்பார்ப்புடன் தேர்தலையும் சந்தித்தது. ஆனால் தமிழக மக்கள் படு தெளிவாக இருந்து 37 இடங்களை அதிமுகவுக்குக் கொடுத்து விட்டனர். மிச்சமிருந்த இரண்டு இடங்களில் ஒன்றை பாஜகவுக்கும், இன்னொன்றை பாமகவுக்கும் கொடுத்து விட்டு கட்சிகளுக்கு முட்டை போட்டு விட்டனர்.
தற்போது தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே ஒரு பாஜக வேட்பாளரான மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி விட்டது.
அதேசமயம், தேமுதிக, பாமக ஆகியவையும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றன. இதில் தேமுதிக கூடுதலாக ராஜ்யசபா எம்.பி பதவியையும் கேட்டு வருகிறது. இத்தனைக்கும் இக்கட்சி போட்டியிட்ட 14 தொகுதிகளில் 11 இடங்களில் டெபாசிட்டைப் பறி கொடுத்து அசிங்கப்பட்ட கட்சியாகும்.
இருப்பினும் தேமுதிகவும் தேவை என்று பாஜக கருதுவதால் அதற்கும் ஏதாவது போட்டுக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் தமிழக பாஜகவில் 2 பேருக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறதாம்.
பொன் ராதாகிருஷ்ணனுடன், மூத்த தலைவரும், தென் சென்னையில் போட்டியிட்டு தோற்றவருமான இல. கணேசனுக்கும் அமைச்சர் பதவி கிடைக்குமாம்.












Click it and Unblock the Notifications