இதெல்லாம் அரசியலில் ஜகஜம்.. ஜெ.வை வாழ்த்திய ரஜினி குறித்து மீசையில் 'மண் ஒட்டாத' பாஜக !
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருப்பதில் முக்கியத்துவம் இல்லை. இது அரசியலில் சகஜமானதுதான் என்று பாஜக தேசிய செயலாளர் முரளீதர ராவ் கூறியுள்ளார்.
ரஜினியை இழுக்க கண்டக்க முண்டக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாஜக. அமீத் ஷா முதல் தமிழிசை செளந்தரராஜன் வரை அத்தனை பேரும் கடுமையாக முயன்று வருகின்றனர்.
ஆனால் நேற்று ரஜினி அதிரடியாக அவர்களுக்கு ஒரு கொட்டு வைத்து விட்டார். அதாவது சிறைக்குப் போய் விட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பி அனைவரையும் அதிர வைத்து விட்டார் ரஜினி.
குறிப்பாக பாஜகவினர் ஆப்பசைத்த குரங்கு நிலைக்குப் போயுள்ளனர். ரஜினி இப்படிப் பண்ணிட்டாரே என்ற ஆதங்கம் அவர்களிடம் இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக பொறுப்பாளரான முரளீதர ராவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

நல்லவர் - சிறந்தவர்
நடிகர் ரஜினிகாந்த் சிறந்த மனிதர். நல்ல நடிகர், மக்கள் செல்வாக்கு மிக்கவர். அவரை போன்ற பிரபலங்கள், நல்லவர்கள் பாரதீய ஜனதாவுக்கு வருவதை வரவேற்போம்.

வாழ்த்து கூறியது சகஜம்தான்
ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது சகஜமானதுதான். இதில் எந்த முக்கியத்துவம் இல்லை.

அடியிலிருந்து பலப்படுத்துவதே நோக்கம்
எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் கட்சியை அடி மட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். இதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும்.

மேனகா கருத்து பாஜக கருத்து அல்ல
மத்திய அமைச்சர் மேனகா காந்தி தனிப்பட்ட முறையில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். அது பாரதீய ஜனதாவின் கருத்து அல்ல. மத்திய அமைச்சராக இருப்பவர் நீதி துறையில் தலையிடுவது ஆகாது.

சாமி சொல்வதும் பாஜக கருத்து அல்ல
சுப்பிரமணியசாமி பல விஷயங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிடுகிறார். அது அவரது சொந்த கருத்து தான்.

ஆனா எங்களைத் திட்டுவது தப்பு சாமி!
தமிழக பாரதீய ஜனதாவை பற்றி அவர் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது. அதே நேரத்தில் கட்சியின் தமிழக தலைமை என்ன சொல்கிறதோ? அதை தான் கட்சி மேலிடம் கவனத்தில் கொள்ளும் என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications