தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் சபை நடவடிக்கைகள் ஒத்திவைப்பு
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது.
சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
தமிழக சட்டசபையில் கடந்த 15-ஆம் தேதி 2018-19-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் சட்டசபை சிறப்பு கூட்டம் கூடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
இதையடுத்து 16, 17 ,18 ஆகிய 3 நாட்களுக்கு சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 19-ஆம் தேதி மீண்டும் அவை கூடியது. அன்றைய தினம் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்றைய தினம் உறுப்பினர்களின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். இதைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது.
அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தனபால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மானியக் கோரிக்கைகள் தாக்கலுக்காக மீண்டும் சில மாத இடைவெளி விட்டு சபை கூடும் என்று தெரிகிறது.