தமிழக முதல்வர் அருகே கால்மேல் கால்போட்டு அமர்ந்த அமைச்சர்கள்! எப்போது, எங்கே தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வர் அருகில், அதுவும் சட்டசபையில், கால் மீது கால் போட்டு உட்கார்ந்தார் அமைச்சர் என்று ஒரு செய்தியை நீங்கள் படித்தால், உங்களுக்கு எப்படி தோன்றும்..?
"அய்யய்யோ.. விடிஞ்சது தெரியாம இவ்வளோ நேரம் நல்லா தூங்கி, கனவு கண்டுகிட்டு கிடந்திருக்குமோ.. ஆபீசுக்கு அடிச்சிபிடிச்சி ஓட வேண்டுமே.." என முகம் கழுவ எந்திரித்து ஓடுவீர்கள்தானே.
அது கனவு கிடையாது. காமராஜர் ஆட்சிவரை தமிழகத்தின் அரசியல் அப்படி சுயமரியாதை சார்ந்ததாகத்தான் இருந்தது என்பது நிஜம்தான் என்பதை அறிய, பின்வரும் வரிகளை படியுங்கள்.
"ராஜாஜி, 17 அமைச்சர்களை வைத்து இருந்தாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. எல்லார் வேலையையும் அவரே செய்தார். ‘அந்த மந்திரி சபையில் ராஜாஜி மட்டும்தான் மெம்பர்; மற்றவர்களெல்லாம் நம்பர்' என்று காமராஜரே ஒருமுறை சொன்னார்.
ஆனால், காமராஜர் அமைச்சரவையில் சி.சுப்பிரமணியம், பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன் ஆகிய மூவர்தான் எல்லாம். சட்டமன்றத்தில் இவர்கள்தான் அனைத்துக்கும் பதில் சொல்வார்கள். மிகமிக முக்கியமான பிரச்னைகளுக்கு மிகமிகச் சுருக்கமாக பதில் சொல்லிவிட்டு காமராஜர் உட்கார்ந்துவிடுவார்.
சட்டமன்றத்தில் முதல்வர் காமராஜர் உட்கார்ந்து இருக்கிறார். அடுத்து உட்கார்ந்துள்ள பக்தவத்சலம் கால்மேல் கால் போட்டுள்ளார். அவரை அடுத்து அமர்ந்துள்ள ஆர்.வெங்கட்ராமன் கால்மேல் கால் போட்டுள்ளார். முதல்வர் அதுபற்றி கவலைப்படவில்லை.
பெரியாருக்கு முன்னால் கால்மேல் கால் போட்டு ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து கட்சித் தொண்டர் அவரைக் கண்டித்தார். அப்போது பெரியார், ‘‘அவரு கால்மேல் அவரு காலைப் போட்டிருக்கார். என் கால்மேல அவரு காலைப் போட்டாத்தான் தப்பு" என்றார்.
தகுதியால் உயர்ந்த பெரிய மனிதர்கள் அப்படித்தான் நினைப்பார்கள். தன்னைச் சுற்றி மிகத் திறமைசாலிகள் இருக்க வேண்டும் என்று காமராஜர் நினைத்தார். தான் படிக்காவிட்டாலும் படித்தவர்கள் தனது அமைச்சரவையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
இன்று மூளை பலம் உள்ளவர்கள் அமைச்சராக்கப்படுவது இல்லை. மேஜையை தட்டுவதற்கு புஜபலம் இருந்தால் போதும். மேஜையைத் தட்டித் தட்டி வலது கை வீங்கிப் போய் நாட்டு வைத்தியரை பார்த்த எம்.எல்.ஏ-க்கள் உண்டு. முதுகெலும்பு உண்டு என்பதை அனைத்து அமைச்சர்களும் மறந்துவிட்ட காலம் இது" (நன்றி: ஜூனியர் விகடன்).
தகுதியால் உயர்ந்த பெரிய மனிதர்கள், தங்களது தகுதி, திறமை மீது முழு நம்பிக்கை கொண்டிருப்பதால், தாழ்வுமனப்பான்மையில் சிக்கி, அதை மறைக்க தங்களை பெரிய மனிதர்களாக வேடமிட்டு காட்டமாட்டார்கள் என்பதற்கு காமராஜரும், பெரியாருமே பெரிய உதாரணங்கள்.
இப்படியெல்லாம், கல்வியிலும், அறிவிலும், சுய மரியாதையிலும், சிறந்த அமைச்சர்கள் அலங்கரித்த நமது தமிழகம், இன்று, ஸ்டிக்கர் ஒட்டுவது, மேஜையை தட்டுவது என்ற பணிகளுக்கான பதவிக்குறியவர்களாக மாற்றப்பட்டுள்ளது யார் குற்றம்? அப்படி சுய மரியாதையை விட்டு செய்யப்படும் அந்த பணியால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது மக்களின் யூகத்திற்கே விடப்படக்கூடியது.

குனிவோம்ல
காமராஜர் அமைச்சரவையை பார்த்திருப்பீர்கள், இந்திரா காந்தி அமைச்சரவையை பார்த்திருப்பீர்கள், ஏன் மோடி அமைச்சரவையை கூட பார்த்திருப்பீர்கள். ஆனால், தற்போதைய தமிழக அமைச்சர்கள் எப்படி என பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் பணியாற்றும் 'ஸ்டைலை' பார்த்திருக்கிறீர்களா? ஓங்கி குனிஞ்சா ஒன்றரை டன் வெயிட்.. பாருங்க.

பன்னீர்செல்வம்
நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் ஜெயலலிதா முன்பாக அப்படி என்ன குனிந்து வாங்குகிறார் என்று கண்ணை கசக்கி உற்றுப்பார்த்தால், 'விஷன் தமிழ்நாடு' ஆவண புத்தகமாம். தொலைநோக்கு விஷன் கேள்விப்பட்டு இருப்பீர்கள். தரை நோக்கு விஷன் கேள்விப்படவில்லையா? அப்போ, அதுதான் இது.

வளர்மதி
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பி மீண்டும் முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு ஸ்பெஷல் கும்பிடு போடும், அமைச்சர் வளர்மதி.

மீண்டும் அவர்தான்
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. அப்போது கதறி கண்ணீர் விட்டபடி பதவிப் பிரமாணம் செய்தார் வளர்மதி. அரசியல் சாசனப்படி, விருப்பு, வெறுப்பின்றி கடமையாற்றுவேன் என்றுகூறி பதவி பிரமாணம் செய்தபோதே, விருப்பு, வெறுப்பை காட்டிக்கொடுத்துவிட்டது கண்ணீர். பதவி பிரமாணத்தின் அர்த்தமும் கேள்விக்குறியான தருணம் அது.

குமுறிய கோகுல இந்திரா
ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதும், கதறி அழுத கண்ணீரை துடைக்க கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திராவுக்கே கைத்தறி துணி பற்றாக்குறையாம். சென்னை வெள்ளத்தில் மக்கள் மிதந்தபோது கூட வராத கண்ணீர் அமைச்சருக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாஜியின் மகா ஐடியா
தலையில் ஸ்டிக்கர் ஒட்டும் கலையை கண்டுபிடித்ததற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காப்புரிமை தரலாம். காரணம் இந்த படம்தான். என்ன அழகாக ரெட்டை இலை சின்னத்தை தலையில் கட்டி அமர்க்களப்படுத்துகிறார் பாருங்களேன். இருந்தாலும் இப்போது அவர் அமைச்சர் பதவி பறிபோனது வேறுகதை.

மீண்டும் வந்தார் வளர்மதி
வேண்டுதல் ஸ்பெஷலிஸ்ட் அமைச்சர் வளர்மதிதான். விதவிதமான வேண்டுதல்களை நிறைவேற்றுவார். ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, தீச்சட்டி எடுத்து பக்தி பழமாக காட்சியளித்தார் வளர்மதி. இன்னும் பல அமைச்சர்கள் பல விதமாக மக்கள் பணியாற்றுவது உங்களுக்கே தெரியும்தானே.












Click it and Unblock the Notifications