68 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
சென்னை: இலங்கை சிறைகளில் உள்ள 68 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து மார்ச் 9-இல் சென்ற 4 மீனவர்கள் பாக். நீரிணைப் பகுதியில் தங்களது பாரம்பரிய இடத்தில் மீன் பிடித்தனர். அப்போது அவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துகொண்டு காரைநகருக்கு அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து 68 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதம்:
பாக். நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு இருந்த மீன் பிடிக்கும் உரிமை, இலங்கை கடற்படையால் இடையூறுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. கச்சத்தீவு அளிக்கப்பட்டது தொடர்பாக, 1974-76 ஆகிய ஆண்டுகளில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் சட்டப்பூர்வ நிலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதனால், இலங்கையுடனான சர்வதேச கடல் எல்லை கோட்டுப் பிரச்னையை முடிந்து போன விஷயமாக கருதக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாகும். அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
ஒப்பந்தங்களையும், நிர்வாக உத்தரவுகளையும் ரத்து செய்து கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை மீட்டுத் தர வேண்டும் என்பது வழக்கின் பிரதான கோரிக்கையாகும்.
மீனவர்களை விடுவிக்கும் போது, படகுகளை இலங்கை அரசு விடுவிப்பதில்லை. இதனால், கடுமையான பருவ நிலையால் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள் சேதமடைந்துள்ளன. எனவே, இலங்கை வசமுள்ள படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் மீட்டு அதனை விரைந்து சீர்செய்து தர வேண்டும்.
மேலும், இலங்கைச் சிறையிலுள்ள 68 தமிழக மீனவர்களையும், 78 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தூதரக ரீதியிலான சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications