மத அமைதியை சீர்குலைத்தால் கடுமையான நடவடிக்கை... முதல்வர் எச்சரிக்கை!
மத அமைதியை குலைக்க யார் முயன்றாலும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
சென்னை : மத அமைதியை குலைக்க யார் முயன்றாலும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயம் தாக்கப்பட்டது பற்றி திமுக மற்றும் காங்கிரஸ் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. கிறிஸ்துவ மத ஆலயங்களையும், மதபோதகர்களையும் தாக்கும் செயல்களில் இந்து அமைப்பினர் ஈடுபடுவது மதுரை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக திமுக எம்எல்ஏ ஆஸ்டின் பேசினார்.
தகாத வார்த்தைகளில் பேசுவதோடு, பைபிள்களை கிழித்து எறிதல், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற அச்சமான சூழலை இந்து அமைப்பினர் ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த 13ம் தேதி கூடல்புதூரில் கிறிஸ்துவ ஆலயத்திற்குள் புகுந்து பெண்களை தாக்கியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் சிறப்பு ஜெபம் நடத்தக் கூடாது என்று மிரட்டியுள்ளனர். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தைரியத்தினாலேயே இந்து அமைப்பினர் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.அரசு உடனடியாக இந்த மதவாத சக்தியினரை ஒடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்சும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், அச்சத்தில் இருக்கும் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது : மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயம் மற்றும் மதபோதகர்கள் மீதான தாக்குதல் குறித்து கூடல்புதூர் காவல்நிலையத்தில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அரசைப் பொருத்த வரை இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத அமைதியை குலைக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.