சத்தீஸ்கர் தேர்தல் வன்முறை- பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்!
கன்னியாகுமரி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தலின் போது மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண் கிளெமண்ட் என்பது தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலால் அங்கு மத்திய பாதுகாப்புபடையினரும், ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வாக்குப் பதிவின் போது பல இடங்களில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானதாக கூறப்பட்டது.

தற்போது இறந்த வீரர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த பாலூர் கம்பிளார் பகுதியைச் சேர்ந்த வர்கீஸின் மகன் ஜாண் கிளெமண்ட் என தெரியவந்துள்ளது.கிளமெண்ட் மனைவி மேரி ஜோஸ்பின் கில்டாபாய். இவர்களுக்கு டிர்ஜின் ஜோசப் என்ற மகனும், டிபிசிலின் ஜோஸி என்ற மகளும் உள்ளனர்.
கிளமண்ட் நேற்று தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற தகவலை காலையில் மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளார். மாலையில் அவர் இறந்து போன தகவலை சி.ஆர்.பி.எப். உயர் அதிகாரிகள் கிளமண்ட் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் கிளமண்ட்டின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறி துடித்தனர். கிளமெண்ட் மரண செய்தி கேட்டதும் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது.












Click it and Unblock the Notifications