இலங்கை கடற்படை கைது செய்துள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: நேற்றும், இன்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 34 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
நான் பலமுறை வலிறுத்தியதன் பேரில், இலங்கை அரசுடன் மத்திய அரசு பேசி, கடந்த 2 மாதங்களாக கைது செய்யப்பட்ட 86 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் வீடு திரும்பும் முன், 26-ம் தேதி 2 படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் மற்றும் இன்று 5 படகுகளில் சென்ற புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரும் என 34 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையின் தலைமன்னார், காங்கேசன் துறையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். பாரம்பரிய பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் மீதான இந்த கைது நடவடிக்கை நியாயமற்றது. மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிக்கப்படுவதும் அவர்களது வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது.
இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தாமல் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நான் பலமுறை வலிறுத்தியுள்ளேன். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நான் நேரில் அளித்த மனுக்களிலும் இதை தெரிவித்துள்ளேன்.
இந்தப் பிரச்சினைக்கு, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக மேற்கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தமே முக்கிய காரணம் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.1,520 கோடியை விரைவில் ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இவை தொடர்பான என் மனுவை 26-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த தமிழக எம்பிக்கள் குழு, அளித்துள்ளது.
எனவே, நீங்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, 28-ம் தேதி (நாளை) விடுவிக்கப்படும் 86 மீனவர்களுடன், தற்போது கைது செய்யப்பட்ட 34 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை வசம் உள்ள 46 படகுகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications