5 மீனவர்கள் விடுதலையை வரவேற்கிறேன், பிரதமர் மோடிக்கு நன்றி: கருணாநிதி
சென்னை: ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொள்ள வேண்டுமென்று நான் கடந்த 31-10-2014 அன்று விடுத்த அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தேன்.
தமிழகத்திலே உள்ள மற்ற அரசியல் கட்சிகளும், மீனவர் அமைப்புகளும், தமிழக அரசினரும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து இது பற்றி வேண்டுகோள் விடுத்து வந்தனர்.
தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீனவர்களின் விடுதலை பற்றி பேசியதையடுத்து, தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தி இன்றைய தினம் கிடைத்துள்ளது.
ஐந்து மீனவர்களின் விடுதலையையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த விடுதலைக்குப் பெரிதும் காரணமான இந்தியப் பிரதமர் மோடிக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின்:
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு
தலைவர்கள் பிரதமர் மோடியை வலியுறுத்தினர். இந்நிலையில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வந்த செய்தியை வரவேற்கிறோம். அவர்கள் விடுதலைக்காக முயற்சி மேற்கொண்ட மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் மீனவர்களை விரைவில் தமிழகத்திற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கருணாநிதி மூலம் வலியுறுத்துவோம் என்றார்.