தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை.. பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்ட ஆளுயர பேனர்கள்
சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு ஆளுயர பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன.
தற்போது பேனர் கலாச்சாரம் பெருகி வருகிறது. குழந்தைக்கு பிறந்தநாள், பெண்கள் பூப்பெய்தல், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் என தொடங்கி பள்ளி, கல்லூரி விளம்பரங்கள் என டிஜிட்டல் பேனர்கள் பெருகி கொண்டே வருகின்றன.
இதிலும் அரசியல்வாதிகளின் பிறந்தநாள், ஜெயிலுக்கு சென்று விடுதலை ஆன நாள் என அரசியல் வட்டாரத்திலும் பேனர் கலாச்சாரம் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு ஏன் இறப்புக்கும் நினைவு நாளுக்கும் பேனர் வைக்கும் அளவுக்கு மக்கள் முன்னேறி விட்டனர்.
விபத்துகள்
இத்தகைய பேனர்களை வைக்கும் இவர்கள் பொதுமக்கள் எத்தனை சிரமப்படுவர் என்பது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. பெரும்பாலும் சாலையின் வளைவுகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் பேனர்களால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன.
டிராபிக் ராமசாமி
இதை சுட்டிக் காட்டிய உயர்நீதிமன்றம் பிரதமர், முதல்வர் உள்ளிட்டோரின் படங்கள் அரசு விளம்பரங்களில் மட்டுமே வரவேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இது தவிர்த்து உயிரோடு உள்ளவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இருக்கக் கூடாது என்று கூறிய நீதிமன்றம் சில விதிகளையும் வகுத்தது. விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் வழக்கு தொடுத்திருந்தார்.
பேனர்கள்
இந்த நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக சாலை முழுவதும் பேனர்கள் ஆக்கிரமித்துள்ளன. ஆனால் அமைச்சர் ஜெயக்குமாரோ அனுமதி பெற்றுதான் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால் இவை அனுமதியின்றி விதிகளை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் என டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்தார்.
முற்றுப்புள்ளி
தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை சுமார் 50 முதல் 100 வரை பேனர்களை வைக்க பல லட்சம் செலவு செய்துள்ளனர். பிளாட்பார்ம்களை ஆக்கிரமித்து பேனர்களை வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வைக்கப்படும் பேனர்களுக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படுமோ என தெரியவில்லை.