குட்கா விற்பனை விவகாரம்.. சிபிஐ விசாரிக்கக் கூடாது.. தடை கோருகிறது தமிழக அரசு
குட்கா புகார் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளது.
Recommended Video
டெல்லி : சட்டவிரோத குட்கா விற்பனை தொடர்பான புகாரில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த விசாரணைக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது.
இருப்பினும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கிகை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில், இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.